1/30/2011

ராமாயணம் பகுதி-8




பரசுராமர் கோபத்துடன் கர்ஜித்தார்.தசரத மன்னனின் புதல்வனே, ராமா! நீ சிவனின் வில்லை ஒடித்ததற்காக பெருமைப்படாதே. அது ஏற்கனவே பழுதுபட்டிருந்தது. பழுதுபட்ட வில்லை ஒடிப்பது என்பது பெரிய காரியம் அல்ல. என் கையில் கிருஷ்ண பராமாத்மா கொடுத்த வில் இருக்கிறது. இதை உன்னிடம் கொடுக்கிறேன். இதில் நாண் ஏற்றி என்னுடன் சண்டைக்கு வரவேண்டும், என்றார். ராமபிரான் அவரது பேச்சைக் கண்டு நடுங்கவில்லை. இதற்குள் தசரதர் பரசுராமனை கைகூப்பி வணங்கி, பரசுராமரே! இப்போதுதான் என் மகனுக்கு மணம் முடித்து ஊருக்கு சென்று கொண்டிருக்கிறோம் இவ்வேளையில் போர் எதுவும் வேண்டாம், வழிவிடுங்கள், என்றார். ராமபிரான் அவரிடம்,மகாப்பெரியவரே! உங்களைப் போன்ற ஞானிகள் என்னைப் போன்ற சிறியவர்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும். அரசகுலத்தில் பிறந்தவர்களை அழிப்பது உமது கொள்கை. ஆனால், அரசகுலத்தில் பிறந்தது எனது தவறல்ல. இருப்பினும், உங்கள் உத்தரவை நான் ஏற்றுக் கொள்கிறேன். விஷ்ணுவின் வில்லை என்னிடம் கொடுங்கள். நான் நாண் ஏற்றுகிறேன் என்றார் பணிவோடு. பரசுராமர் வில்லை ராமனிடம் கொடுத்தார். ராமர் அந்த வில்லை வளைத்து நாணில் அம்பை வைத்தார். வில் வளைந்ததை கண்டு பரசுராமரின் முகம் சுருங்கிப்போய்விட்டது. யாராலும் வளைக்கமுடியாது என்று கருதிய வில் வளைந்துவிட்டதே என நாணம் கொண்டார். மிகுந்த பணிவான குரலுடன், இந்த வில்லை விஷ்ணுவைத் தவிர வேறு யாராலும் வளைக்க முடியாது. ஆனால், ராமா! நீ வளைத்துவிட்டாய். நீ யார் என்பதை இப்போது உணர்ந்து கொண்டேன். எனது அகங்காரத்தை உனது செயல் அழித்துவிட்டது. உன் மண ஊர்வலத்தை தடுத்து நிறுத்தியதற்கு பிராயச்சித்தமாக இதுவரை நான் செய்த தவத்தின் வலிமையை உனக்கு தருகிறேன், என்று சொல்லிவிட்டு ராமனை வலம் வந்தார். பின்பு அங்கிருந்து போய்விட்டார்.

தசரதர் உள்ளம் பூரித்தார். மகனின் பெருமையை உணர்ந்தார். விஷ்ணுவே தனக்கு மகனாக வந்தது கண்டு அவரது மனம் மகிழ்ச்சிக் கடலில் திளைத்தது. அனைவரும் அயோத்தியை அடைந்தனர். அயோத்தி நகரம் விழாக்கோலம் கொண்டிருந்தது. ஊரெங்கும் அலங்கார தோரணங்கள். தங்கள் இளவரசர்களையும், இளவரசிகளையும் திருமணக் கோலத்தில் காணும் பாக்கியத்தைப் பெற்ற அயோத்தி மக்கள் சீதாதேவியின் அழகு பற்றியும், குணம் பற்றியும் மற்ற தேவிகளின் இயல்பு பற்றியும் பேசி உள்ளம் மகிழ்ந்தனர். தசரத மன்னனுக்கு இணையாக இவ்வுலகில் இனி வேறு யாருமில்லை என புகழ்ந்தனர். திருமணம் முடிந்து பல நாட்கள் வரை அரண்மனை மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கிக் கிடந்தது. தசரதனின் மூன்று தேவியர்களும் எவ்வித வித்தியாசமும் பாராமல் எல்லா மருமகள்களையும் சம உரிமை கொடுத்து கவனித்துக் கொண்டனர். பொதுவாக பெண்கள் புகுந்த வீட்டிற்கு வந்தபிறகு பிறந்த வீட்டை நினைத்துக் கொண்டிருப்பது இயல்புதான். ஆனால் மாமியார்களின் அன்பில் மூழ்கி போன மருமகள்கள் தங்கள் பிறந்த வீட்டைக் கூட மறந்துவிட்டனர். பிறந்த வீட்டின் சூழ்நிலையே புகுந்தவீட்டிலும் நிலவியது. கைகேயியின் சகோதரன் யுதாஜித். பரதனின் தாய்மாமன். அவன் பரதனையும், சத்ருக்கனனையும் அழைத்துக் கொண்டு தனது நாட்டிற்கு சென்றான். பரத, சத்துருக்கனரின் மனைவியரும் உடன் சென்றனர். ராமன் சீதையுடன் அயோத்திலேயே தங்கியிருந்தார். திருமணம் முடிந்தபிறகும், ராமனின் குணஇயல்புகளில் எந்த மாறுதல்களும் இல்லை. பொதுவாக திருமணத்திற்குப் பிறகு ஆண், பெண் இருபாலரின் குணங்களும் மாறிப்போவதாக குடும்பத்தாரால் குற்றம் சாட்டப்படுவதுண்டு. ஆனால், ராமனின் வாழ்வில் அப்படி ஒரு நிலை இல்லை.

ராஜகுமாரனாக இருந்தாலும் கூட அவரது மனதில் ஆணவம் என்பது அறவேயில்லை. பெற்றவர்களுக்கு நல்ல மகனாக திகழ்ந்தார். நோயற்ற வாழ்வு வாழ்ந்தார். சத்தியம் அவரது உயிர்மூச்சாக இருந்தது. கருணை மிக்கவராக திகழ்ந்தார். வந்தோருக்கு எல்லாம் வாரி வழங்கினார். தனக்குள் கட்டுப்பாட்டை வளர்த்துக் கொண்டார். ராமனைச் சுற்றிலும் நல்லவர்கள் மட்டுமே இருந்தனர். லட்சுமணன், அவரை விட்டு ஒருகணம் கூட பிரியவில்லை. அந்த குடும்பத்தில் பன்னிரண்டு ஆண்டுகள் வரை எந்தவித பிரச்னையும் இல்லை. அனைவரும் ஒற்றுமையுடன் வாழ்ந்தனர்.பண்புமிக்க ராமன் தங்கள் அரசனாக பதவி ஏற்கப்போகும் நாள் எது என்பதைப் பற்றி அயோத்திமக்கள் அடிக்கடி விவாதிப்பார்கள். அந்த நல்ல நாளுக்காக அவர்கள் காத்துக் கிடந்தார்கள். தசரதரும் மக்களின் மனநிலையை புரிந்து கொண்டார். மூத்தவன் ராமனுக்கு பட்டாபிஷேகம் நடத்த வேண்டிய நாள் நெருங்கிவிட்டதை உணர்ந்தார். பட்டாபிஷேகம் தொடர்பாக ஆலோசனை செய்ய அறிஞர்களையும், பக்கத்து நாட்டு மன்னரற்களையும் வியாபாரிகளையும், முனிவர்களையும் அவர் அழைத்தார். இந்த நாட்டை எனது முன்னோர்கள் தங்கள் குடும்பமாகவே கருது ஆண்டுவந்தனர். நானும் இத்தனை காலமும், அவர்கள் வழியே நடந்துவிட்டேன். எனக்கு வயதாகிவிட்டது. என் செல்வகுமாரன் ராமனிடம் நாட்டின் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைக்க இருக்கிறேன். அவனிடம் நாட்டை ஒப்படைத்துவிட்டு நான் காட்டிற்கு சென்று என் வாழ்வின் இறுதி காலத்தை தவம் இருந்து கழிக்க முடிவு செய்துள்ளேன், என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

ராமாயணம் பகுதி-7



மிகச்சிறந்த முகூர்த்த நாள் ஒன்றை விசுவாமித்திரர் குறித்தார். திருமணவிழாவிற்கான ஏற்பாடுகள் மிதிலையில் மிகச்சிறப்பாக நடந்தன. தங்கள் நான்கு இளவரசிகளுக்கும் திருமணம் என்பதால் ஊரே கோலாகலமாக இருந்தது. எங்கும் மகிழ்ச்சி புயல்தான். மணநாளும் வந்தது. மணக்கோலம் பூண்ட நான்கு ராஜகுமாரர்களும் மணமேடைக்கு வந்தனர். மங்கள ஓசை முழங்கியது. எங்கு பார்த்தாலும் மங்கலச் சின்னங்கள். மணவிழாவுக்கு வந்த மக்களுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டன. அனைவரும் அதை அணிந்து கொண்டனர். அனைவரது கையிலும் மஞ்சள் அரிசி கொடுக்கப்பட்டது. ஒருபக்கம் விருந்து விசேஷம் நடந்து கொண்டிருந்தது. ராம சகோதரர்களுக்கு திருமணம் முடிக்க விஜயா என்ற முகூர்த்த நேரம் குறிக்கப்பட்டிருந்தது. இந்த நேரம் உலகம் பிறந்ததிலிருந்து அந்த ஒரே ஒருமுறைதான் வந்ததாம். இப்படி ஒரு நேரம் இனியார் வாழ்விலும் வரப்போவதும் இல்லை. அப்படிப்பட்ட சிறப்பான முகூர்த்தத்தில் சீதாபிராட்டியின் கழுத்தில் மங்கல நாண் பூட்டினார் ராமபிரான். அண்ணியின் கழுத்தில் அண்ணன் தாலி அணிவித்த அந்த இனிய காட்சியை மற்ற தம்பிகளும் அவர்களுக்கு நிச்சயிக்கப்பட்ட மணமகள்களும் கண்டு மகிழ்ந்தனர். ஜனக மகாராஜா ராமச்சந்திரமூர்த்தியின் கைகளைப் பிடித்து, ஸ்ரீராமா! என் மகள் சீதை இன்று முதல் உன்வாழ்வில் அறம் வளர்க்கும் துணைவியாக இருப்பாள். அவளது கரத்தை உனது கையினால் பற்றிக் கொள் என்றும், இவளோடு சிறந்து வாழ். உனக்கு மங்களம் உண்டாகட்டும். உன்னை கணவனாக பெற்றதால் அவள் பாக்கியவதியாகிறாள். உனது நிழல் போல எக்காலமும் உன்னை தொடர்ந்து வருவாள். ஒரு கணம் கூட உன்னை பிரிந்திருக்கமாட்டாள். நீயே கதி என பேரன்புடன் இருப்பாள், என்று உறுதிமொழி அளித்தார்.

பின்பு அவரே மந்திரங்களை ஓதினார். தன் கையில் இருந்த புனித தீர்த்தத்தை ராமனின் கரத்தில் தெளித்தார். அப்போது தேவலோகத்திலிருந்து முரசு சத்தம் கேட்டது. தேவர்களும், முனிவர்களும் வானுலகிலிருந்து பூமழை பொழிந்தனர். இறைவனுக்கே திருமணம் நடக்கும்போது தேவர்கள் மனதில் ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவா வேண்டும்! அதேநேரம் இந்த உலகில் உள்ள கெட்டவர்களின் உள்ளங்களில் இனம்புரியாத நடுக்கம் ஏற்பட்டது. அது ஏன் என அவர்களால் உணரமுடியவில்லை. உலகில் உள்ள நல்லவர்களுக்கு மட்டுமே ராமனின் திருமணக் காட்சி தரிசனம் கிடைத்துக் கொண்டிருந்தது. பிறகு ஜனகர் லட்சுமணனின் அருகில் வந்தார். தன் மகள் ஊர்மிளாவை அவனுக்கு தாரை வார்த்துக் கொடுத்தார். இதையடுத்து தன் தம்பி பெண்களையும் தன் பெண்களாக பாவித்து, மாண்டவியை பரதனுக்கும், சுருதகீர்த்தியை சத்ருக்கனனுக்கும் திருமணம் செய்து கொடுத்தார். நான்கு தம்பதிகளும் அக்னியை வலம் வந்தனர். ஜனகரையும், தசரதரையும் விழாவிற்கு வந்திருந்த மற்ற முனிவர்களையும் வணங்கினர். அவர்களிடம் ஆசீர்வாதம் பெற்றனர். சாஸ்திரவிதி சற்றும் தவறாமல் இந்த திருமணம் நடந்தேறியது. இவ்விடத்தில் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். சாஸ்திரவிதிகள் தவறாமல் நடந்தாலும், மனிதனாகப் பிறந்துவிட்டால் அவன் துன்பத்திற்கு ஆட்பட்டே ஆக வேண்டும் என்பதை இந்த திருமணக்காட்சி விளக்குகிறது. தெய்வத்தின் திருமணமாக இருந்தாலும், தெய்வம் மனிதனாக அவதரித்திருப்பதால் பின்னால் படப்போகும் கஷ்டங்களிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளவில்லை. இந்த திருமணத்திற்காக பொருத்தம் பார்க்கப்பட்டது. அனைத்தும் நல்லவிதமாகவே நிறைவேறியது. இருப்பினும் கூட ராமனும், லட்சுமணனும் அவர்களது மனைவியரை பிரிய நேர்ந்தது. ஜோதிடம் பார்த்து பொருத்தம் பார்த்து திருமணம் செய்பவர்கள்கூட பிரிந்து போய்விடுவதன் தத்துவம் இதுதான். மனிதத் திருமணங்கள் கருத்து வேறுபாடின்றியோ, பிரிவினை இன்றியோ அமையாது.

இதன்பிறகு விசுவாமித்திரர் தசரதரிடமும், ஜனகரிடமும் விடைப்பெற்றார். தன் பணி முடிந்த மகிழ்ச்சியுடன் இமயமலைக்கு தவம் இருக்கச் சென்றார். ஜனகர் தம் புதல்விகளுக்கு தகுந்த சீர்வரிசை அளித்து அயோத்திக்கு மணமக்களை அனுப்பி வைத்தார். செல்லும் வழியிலேயே ராமபிரானுக்கு கடும் சோதனை ஏற்பட்டது. திடீரென பேய்க்காற்று வீசியது. பறவைகள் அங்குமிங்கும் பறந்து திரிந்தன. அவை பயந்துபோய் கீச்சிட்டன. பலமான்கள் அங்குமிங்கும் பாய்ந்து ஓடின. இயற்கையின் சீற்றமோ என அனைவரும் கருதினர். ஆனால் அவர்கள் நடந்து கொண்டிருந்த அந்த இரவு வேளையிலும் அதி பயங்கர இருட்டில் ஒரு முனிவர் தோன்றினார். இருளிலும் அவர் ஒளிர்ந்தார். அவர்தான் ஜமதக்னி முனிவரின் மகன் பரசுராமர். அவர் ஜடாமுடி தரித்தவர். அவரது கண்கள் கோவைப்பழம் போல சிவந்திருந்தன. அவரது நோக்கமே அரச குலத்தினரை அழிப்பதுதான். ராமனுடன் வந்த முனிவர்கள் எல்லாம் பரசுராமரை வணங்கினார்கள். ஆனால் அந்த வணக்கத்தை பரசுராமர் ஏற்றுக் கொள்ளவில்லை. பரசுராமர், ராமசகோதரர்களை வழிமறிக்க காரணமும் இருந்தது. இவரது தந்தை ஜமதக்னியை அரசன் ஒருவன் கொன்றுவிட்டான். எனவே, இந்த உலகில் அரசகுலமே இருக்கக்கூடாது என பரசுராமர் சபதமிட்டிருந்தார். ஏராளமான அரசர்களை கொன்றும் குவித்தார். இப்போது தசரதர், மற்றும் அவரது நான்கு இளவரசர்கள் கண்ணில்பட்டு விட்டதால் அவர்களையும் அழிக்க வேண்டும் என்பதே அவரது நோக்கமாக இருந்தது. அவர் ராமரைப் பார்த்து கோபத்துடன் பேச ஆரம்பித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

ராமாயணம் பகுதி-6




மகிழ்ச்சிக்கடலில் அவள் மூழ்கிப்போனாள். பிறகென்ன! உலகைக் காக்கும் பரம்பொருள் மானிட அவதாரம் எடுத்துள்ளார். அன்னை மகாலட்சுமி சீதையாக பூமிக்கு வந்திருக்கிறாள். மகாலட்சுமி இருக்கும் இடத்தில் செல்வவளத்துக்கு குறைவில்லை. அந்த செல்வநாயகியை அடையப் போகிறவர் மகாவிஷ்ணு. இருவரும் இணைந்து விட்டால், இந்த உலகமும் சுபிட்சம் பெறத்தானே போகிறது!விஸ்வாமித்திரர் திருமணப் பேச்சை துவக்கினார். ஜனகராஜா! பிறகென்ன! உனக்கு மருமகன் கிட்டிவிட்டான். எவராலும் அசைக்கக்கூட முடியாத சிவதனுசை என் சீடன் உடைத்தே போட்டு விட்டான் என்றால், நீ அவனது பராக்கிரமத்தை உணர்ந்திருப்பாய் என்றே கருதுகிறேன்,.அதிலென்ன சந்தேகம் முனிவரே! எனது தூதர்களை இப்போதே அயோத்திக்கு அனுப்பி தசரத மாமன்னரை அழைத்து வரச் சொல்கிறேன். மாப்பிள்ளை வீட்டார் பெண்ணைப் பார்க்க வேண்டும் என்ற சம்பிரதாயம் இருக்கிறதே! மாப்பிள்ளையின் பெற்றோர் சம்மதமும் முறைப்படி பெற வேண்டுமல்லவா? என்றார் ஜனகர். அதன்படியே தூதர்கள் அயோத்தி சென்றனர். மதிலையில் நடந்த விபரங்களை வரிவிடாமல் விபரமாக தசரதரிடம் கூறினர். தன் மகன்கள் விஸ்வாமித்திரரின் யாகத்தை வெற்றிகரமாக நடத்தியது கேட்டும், அரக்கியும், அரக்கர்களும் அழிந்து பட்டதைக் கேட்டும், இவற்றையெல்லாம் விட சிவதனுசுவை ஒடித்து, மகாலட்சுமிக்கு நிகரான சீதையை மணம் முடிக்க இருப்பது கேட்டும் தசரதரும், ராணிகளும் அடைந்த இன்பத்திற்கு அளவே இல்லை. அயோத்தி மக்களிடமும் இந்த செய்தி வேகமாக பரவ, நாடே கோலாகலத்தில் ஆழ்ந்தது. விஸ்வாமித்திரர் காரணமாகத்தான் தன் மக்களை காட்டுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார் என்பதையும் தசரதர் புரிந்து கொண்டார். உடனடியாக படை பரிவாரங்கள் மணமகளுக்குரிய நகை, சீர்வரிசையுடன் மிதிலை நோக்கி புறப்பட்டது. இதற்கிடையே மிதிலையில் மற்றொரு திருமணப் பேச்சும் எழுந்தது.

மகரிஷியே! என் மகள் சீதைக்கு தங்கமகன் ராமன் கிடைத்து விட்டார். அதே போல், என் அன்புப்புதல்வி ஊர்மிளாவுக்கும் மாப்பிள்ளை வேண்டும். ராமனுடன் வந்துள்ளாரே இளவல் லட்சுமணன். அவர் மட்டும் சாதாரணமானவரா? அண்ணனுக்கேற்ற தம்பி. அண்ணனின் நல்வாழ்வுக்காகவே தன்னை அர்ப்பணித்தவர். இப்படிப்பட்ட பாசப்பிணைப்புள்ள குடும்பத்தில், இந்த அன்புச்சகோதரிகளும் இருந்தால், இறுதிவரை குடும்ப ஒற்றுமை நிலைத்திருக்குமே! லட்சுமணனுக்கு ஊர்மிளாவைத் திருமணம் செய்து வைத்து விடுவோமே,. ஜனகர் இவ்வாறு சொல்லவும், விஸ்வாமித்திரர் மகிழ்வுடன் சம்மதித்தார். ராமனுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. சம்சாரம் கூட ஒரே வீட்டிலிருந்து கிடைக்கிறது என்றால், எங்கள் ஒற்றுமையை பிரிக்க எவரால் இயலும், என இரும்பூது எய்தினார். நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் ஜரூராக நடந்து முடியவும், தசரதர் மிதிலைக்கு வரவும் சரியாக இருந்தது. தங்கள் நாட்டு இளவரசியை மணம்பேசி முடிக்க பக்கத்து நாட்டு ராஜா வருகிறார் என்றால் மிதிலைமக்கள் சும்மாவா இருப்பார்கள். எங்கும் இதே பேச்சு. ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் தான். சம்பந்தி தசரதரை வரவேற்றார் ஜனகர். பரதன், சத்ருக்கனன், தசரதரின் தேவியர் உள்ளிட்டோர் வந்திருந்தனர். இவர்களோடு வந்திருந்த வசிஷ்டமாமுனிவர், திருமணப்பேச்சை ஆரம்பித்தார். ஜனகா! உன் புத்திரியை மணக்கப்போகும் எங்கள் ராமனின் குலப்பெருமையைக் கேள். பிரம்மாவின் மகன் மரீசி. அவருக்கு ஒரு மகன்; அவர் தான் காஷ்யப முனிவர். இவர் பெற்ற மகன் சூரியபகவான். சூரியனின் மகன் மனு.மனுவின் உத்தமபுத்திரன் இக்ஷ்வாகு. இவரைத் தொடர்ந்து, திரிசங்கு, மாந்தாதா, திலீபன், பகீரதன், ரகு, அம்பரீஷன், யயாதி, அஜன் ஆகியோர் பிறந்தனர். இந்த வரிசையில் வந்தவர் தான் எங்கள் தசரத மகாராஜா. உலகைப் படைக்கும் பிரம்மனின் மரபில் வந்த தசரதர் நான்கு திருக்குமாரர்களைப் பெற்றெடுத்தார். அவர்களில் மூத்தகுமாரருக்கு தங்கள் மகள் சீதையையும், இரண்டாமவருக்கு இரண்டாம் மகள் ஊர்மிளாவையும் பெண் கேட்கிறோம். உன் சம்மதம் முறைப்படி தேவை,.

ஜனகர் மகிழ்ச்சியுடன் சம்மதித்து, தசரதரே! தாங்கள் உங்கள் குலப்பெருமையை வசிஷ்டர் வாயிலாகச் சொன்னீர்கள். எங்கள் குலப் பெருமையையும் தாங்கள் அறிய வேண்டும். நிகேது, சுமி, மகாவீரன் ஆகிய பெரியவர்களின் வரிசையில் அவதரித்தவர் தான் ஹரஸ்வரோமன். அவர் இரு குமாரர்களை ஈன்றெடுத்தார். மூத்தவன் இந்த ஜனகன். இரண்டாமவன் என் தம்பி குசத்வஜன். அவனுக்கும் என்னைப் போலவே இரண்டு பெண்கள் இருக்கிறார்கள். அவர்கள் மாண்டவி, சுருதகீர்த்தி. இவர்களுக்கும் மணமகன்களை தேடிக் கொண்டிருக்கிறோம், என்றே நிறுத்தினார். விஸ்வாமித்திரர் இப்போது தொடர்ந்தார். ஜனகா! இதில் உனக்கோ, உன் தம்பி குசத்வஜனுக்கோ எந்தக் கவலையும் வேண்டாம். தாய்மார்கள் வேறென்றாலும் கூட தசரதரின் மகன்கள் தான் பரதனும், சத்ருக்கனனும். அண்ணன் புதல்விகள் வாழும் வீட்டிற்கே தம்பி புதல்விகளும் செல்வது தான் முறை. இந்த அன்புச்சகோதரர்களை இங்கிருக்கும் அன்புச்சகோதரிகள் ஆளட்டுமே, என்று கூறி சிரித்தார். ஜனகருக்கு புரிந்து விட்டது. ஆஹா! பாக்கியம் செய்தோம் நானும் என் தம்பியும். மாண்டவியும், சுருதகீர்த்தியும் என்னைப் பொறுத்தவரை தம்பி மக்களல்ல. என் மக்கள் தான். சீதைக்கும், ஊர்மிளாவுக்கும் இங்கு என்ன உரிமைகள் உண்டோ அதே உரிமை அவர்களுக்கும் உண்டு. என் தம்பி புதல்விகளை பரதனுக்கும், சத்ருக்கனனுக்கும் மணம் முடிக்க சம்மதிக்கிறேன்,. ஜனகர் இவ்வாறு சொல்லவும், தசதரரும் அவரது மனைவியரும் அடைந்த ஆனந்தத்திற்கு எல்லையே இல்லை. ஒரு திருமணப் பேச்சுக்காக வந்தவர்கள், நான்கு திருமணப் பேச்சை முடித்து விட்டனர்.
மேலும் இங்கே தொடர்க...

ராமாயணம் பகுதி-5




அந்த அழகு விழிகளை ராமனின் கண்களும் சந்திக்கத் தவறவில்லை. அந்த நீலவண்ணக் கண்ணைக் கொண்டவன், அவளை நோக்கவும், அந்த கருவிழிகள் வெட்கத்தால் தரை நோக்கித் தாழ்ந்தது. மீண்டும் ஆவலுடன் மேலெழுந்து தணிந்தது. அவள் செக்கச் சிவந்த அழகு. அவன் கார்மேனியன். கருப்பும் நீலமும் கலந்தவன். அந்த செம்பொன் மேனியளை நம் அண்ணல் நோக்க அவளும் நோக்கினாள். கண்கள் கலந்து விட்டால் மனங்களும் ஒன்றிணைந்து விட்டதாகத்தானே அர்த்தம். யார் அவள் என்று உங்களுக்கு சொல்லாமலே தெரிந்திருக்குமே! அவள் தான் மிதிலைநகர் இளவரசி ஜனகபுத்ரி சீதாதேவி. ராமன் அவ்விடத்தை கடந்து ஜனகரின் அரண்மனைக்கு விஸ்வாமித்திரருடன் சென்றடைந்தான். ஜனகர் விஸ்வாமித்திரரையும், அவருடன் வந்த தசரத குமாரர்களையும் அன்புடன் வரவேற்றார். தன் புத்ரிகள் சீதைக்கும், ஊர்மிளாவுக்கும் திருமணம் செய்ய வேண்டிய மாபெரும் கடமை தம்முன் இருப்பதை விஸ்வாமித்திரரிடம் தெரிவித்தார். பெண்ணைப் பெற்றவன் ஏழையாய் இருந்தால் என்ன... பணக்காரனாக இருந்தால் என்ன? தன் மகளுக்கு ஒரு குணவான் அமைய வேண்டும். எந்த கெட்ட வழக்கமும் இருக்கக்கூடாது. மகளை கண் கலங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பலசாலியாக இருக்க வேண்டும், தெய்வப்பற்றுள்ளவனாக இருக்க வேண்டும், என்றெல்லாம் எண்ணுவது சகஜம்தானே! ஜனக மகாராஜாவும் இதே கவலையில் தான் இருந்தார். போதாக்குறைக்கு சிவபெருமானால் அருளப்பட்ட சிவதனுசு என்னும் வில்லும் அவரிடம் இருந்தது. அதை ஜனகரைத் தவிர வேறு யாராலும் அசைக்கக்கூட முடியாது. அதை யார் ஒருவன் தூக்கி நாணேற்றி அம்பெய்கிறானோ, அனனுக்கே தன் மகளை மணம் முடித்துக் கொடுப்பேன் என்பது ஜனகரின் நிபந்தனை. ஏன் இந்த நிபந்தனை? ஜனகர் ஒருமுறை யாகம் ஒன்றைச் செய்தார்.

ஒரு கலப்பையால் யாககுண்டம் அமைப்பதற்கான நிலத்தை உழுதபோது, கலப்பை ஏதோ ஒரு இடத்தில் தட்ட, அவ்விடத்தை அகழ்ந்து பார்த்த போது, அங்கே அழகிய பெண் குழந்தையைக் கண்டார். அவளே சீதா. அவள் லட்சுமியின் அவதாரமல்லவா? அவளை கிருஷ்ண பரமாத்மாவைத் தவிர வேறு யாரால் திருமணம் செய்ய இயலும்? எனவே தான் சிவபெருமான் சிவதனுசுவை ஜனகரிடம் கொடுத்து, இதை யாரால் தூக்க இயலுகிறதோ அவளுக்கே இந்தப் பெண்ணை திருமணம் செய்து கொடுக்க வேண்டும் எனச் சொல்லி மறைகிறார். இங்கே கிருஷ்ண பரமாத்மா மானிட வடிவெடுத்து, ராமனாய் பூமிக்கு வந்துள்ளார். தன் தேவியை அடைய இங்கு வந்திருக்கிறார். அவர் பூமியில் பிறக்கிறார் என்றால் வைகுண்டத்தில் அவரைத் தன் மடியில் சுமந்திருக்கும் ஆதிசேஷனுக்கு என்ன வேலை? கிருஷ்ணா! நானும் உன்னோடு பூமிக்கு வருகிறேன், என்கிறான் ஆதிசேஷன். அவனைத் தம்பி என அழைக்கும் கிருஷ்ணர், சேஷாத்திரி! நீ பூமியில் என் தம்பி லட்சுமணனாய் பிறப்பாய் என்கிறார். அடுத்து சங்கு, சக்கரங்கள் ஓடி வந்து கேவிக்கேவி அழுகின்றன. ஆதிசேஷனும், நீங்களும் பூமிக்கு போன பிறகு எங்களுக்கென்ன வேலை? நாங்களும் உங்களோடு வருகிறோம், என கண்ணீர் சிந்தினர். அவர்கள் தன் மீது கொண்ட பாசத்தை உணர்ந்த பகவான் விஷ்ணு, சங்குநாதா! நீ பரதன் என்ற பெயரில் என் தம்பியாய் வருக, சக்கரத்தாழ்வாரே! நீ சத்ருக்கனன் என்ற பெயரில் கடைக்குட்டி தம்பியாய் வருக, என அருள்பாலித்தார். இவர்கள் அனைவரும் தசரத குமாரர்களாக அவதரித்தனர். நான்கு சகோதரர்களுக்கு வெவ்வேறு குடும்பங்களில் பெண் எடுத்தால் பிரச்னை தானே மிஞ்சும்! எனவே ஒரே குடும்பத்தில் பெண் எடுத்தால் நல்லது தானே என்று விஸ்வாமித்திரர் நினைத்திருக்கக்கூடும். அவர் முற்றும் உணர்ந்த ஞானியல்லவா? ஆம்! ஜனகரின் தம்பி குசத்வஜன். அவர் சாங்காஸ்யா தேசத்து அரசர். அவரையும் விஸ்வாமித்திரர் நினைவில் வைத்திருந்தார். அவருக்கும் இரண்டு புத்திரிகள். மாண்டவி, சுருதகீர்த்தி என்னும் திருநாமம் கொண்டவர்கள். இவர்கள் பரதனுக்கும், சத்ருக்கனனுக்கும் நிச்சயிக்கப்பட்டால், ஒற்றுமையான சகோதர, சகோதரிகள் பிரியவே மாட்டார்கள் என்பது அவரது கணிப்பு. இதெல்லாம் இருக்கட்டும்! முதலில் போட்டியில் வென்றாக வேண்டுமே! ராமனால் மட்டும தான் அந்த வில்லில் நாணேற்ற முடியும் என்பதை விஸ்வாமித்திரர் அறிந்து தானே வைத்திருந்தார். ஜனகரிடம் அவர் தன் விருப்பத்தைச் சொன்னார்.

ஜனகா! வில்லில் நாணேற்றும் போட்டிக்கு ஏற்பாடு செய். யார் வேண்டுமானாலும் போட்டியில் கலந்து கொள்ளட்டும். நான் வந்திருக்கும் இந்த சமயத்தில் போட்டி நடந்தால் மிகவும் மகிழ்வேன், என்றார். ஜனகர் மகிழ்ச்சியுடன் சம்மதித்தார். பல நாட்டு வில்லாதி வில்லர்களெல்லாம் வந்தனர். சிவதனுசுவை அசைக்கக்கூட முடியாமல், அவமானத்தால் தலையை தொங்க விட்டுக் கொண்டு சென்றனர். இச்சமயத்தில், ராமனை தன் கண்ணசைவால் ஏவினார் விஸ்வாமித்திரர். அவரது குறிப்பை உணர்ந்த ராமன், பீடு நடை போட்டு சிவதனுசின் அருகில் சென்றார். வில்லுக்கு மரியாதை செலுத்தினார். ஒற்றைக் கையால் தூக்கினார். நாணை இழுத்தார். அவரது பலத்தில் பாதிக்கும் குறைவாகவே அந்த வில் அமைந்திருந்தது. நாணை இழுக்கவும் மிகப்பெரிய ஓசையுடன் இரண்டாக ஒடிந்தது. அந்த ஓசை இடி ஓசைக்கும் மேலானது. உலகிலுள்ள அனைத்து ஜீவராசிகளும் அந்த ஓசை கேட்டு ஒரு கணம் நடுங்கி விட்டன. ஜனகர், விஸ்வாமித்திரர், லட்சுமணன் நீங்கலாக அங்கு கூடியிருந்த அரசர்கள் கூட நடுங்கி விட்டார்கள்.ஜனகராஜனுக்கு மிகவும் மகிழ்ச்சி. வில்லொடித்த வாலிபனை அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. மகளுக்கேற்ற மணாளன் கிடைத்த மகிழ்ச்சி அடங்க வெகுநேரம் ஆயிற்று. சீதைக்கும் இத்தகவல் எட்டியது.என் மனதுக்கு பிடித்த அந்த அழகரா சிவதனுசை ஒடித்தார்? அவள் கண்களில் காதல் பார்வை பொங்கியது.
மேலும் இங்கே தொடர்க...

ராமாயணம் பகுதி-4



தசரதரின் முன் வந்து நின்ற அந்த இளைஞன் வேறு யாருமல்ல... லட்சுமணன் தான்... தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்ற பழமொழிக்குச் சொந்தக்காரன்.தந்தையே! என் சகோதரன் எங்கிருக்கிறாரோ அங்கிருப்பதே எனக்கு பெருமை, வேலை, கடமை எனக்கருதுபவன் நான். அவர் கானகம் சென்றால் நானும் அவருடன் செல்வேன். அவரின்றி நான் இல்லை; அண்ணனுடன் செல்வதென முடிவெடுத்து விட்டேன், என்ற லட்சுமணனின் சொல் கேட்டு தசரதருக்கு இன்னும் இக்கட்டான நிலைமை ஆயிற்று. ஒரே நேரத்தில் இரண்டு மைந்தர்களை இழந்து விடுவோமோ என பயந்தார்.ஆனாலும், லட்சுமணனை தடுக்கும் சக்தி அவருக்கில்லை. இருவரும் கானகம் செல்ல தசரதர் அனுமதி அளித்தார். விஸ்வாமித்திரர் அந்த வீர சகோதரர்களுடன் காட்டுக்கு புறப்பட்டார். காட்டிற்குள் மனித ஜீவன்கள் யாருமே வருவதில்லை. தடாகை விழுங்கி விடுவாள் என்ற பயம். அங்கு வந்த பின், தாடகையை கொல்வதற்கு ராமன் யோசித்தார். ஏனெனில், அவள் ஒரு பெண். அரக்கியாக இருந்தாலும் பெண் என்பதால் அவளை கொல்வதற்கு ராமனிடம் தயக்கம் இருந்தது. விஸ்வாமித்திரர் ராமனின் எண்ணத்தை புரிந்து கொண்டார். ராமா, அவளுக்கு பெண்மைக்குரிய எந்த இலக்கணமும் கிடையாது. மனித மாமிசம் உண்ணும் பெண்மணியை கொல்வதில் எந்த தவறும் இல்லை. அவளை உடனே அழித்துவிடு, என்றார். ராமனும் விஸ்வாமித்திரரின் சொல்லில் இருந்த நியாயத்தை உணர்ந்து வில்லை எடுத்து ஒலி எழுப்பினார். அவரது நாண் அசைவில் அந்த கானகமே நடுங்கியது. விலங்குகள் ஓடி மறைந்தன. நாண் ஒலி கேட்டு கலங்கிப் போன தாடகை வெளியே வந்தாள். யாரடா அவன்! எனது கானகத்திற்குள் புகுந்து தைரியமாக வில்லை எடுத்தவன்! உன்னை ஒழிக்காமல் விடமாட்டேன், என கர்ஜித்தவளாக வெளியே வந்தாள்.

ராமன் வில்லெடுத்து தாடகையின் மீது அம்புமழை பொழிந்தார். தாடகை அலறிக் கொண்டே சாய்ந்தாள். உயிர் பிரிந்தது. அவளது மறைவு செய்தி அறிந்த மகன்கள் மாரீசனும், சுபாகுவும் ராமனை தாக்க பாய்ந்தோடி வந்தனர். சுபாகுவை அக்னி அஸ்திரத்தால் ராமன் சுட்டெரித்தார். மாரீசன் மீது மானவம் என்ற அஸ்திரத்தை எய்தார் ராமன். அது மயக்கும் சக்தி வாய்ந்தது. மயங்கி போன மாரீசன், எங்கோ ஓடிப் போய்விட்டான். ராமாயணத்தில் ராமனின் முதல் போர் இதுதான். போரில் வெற்றி பெற்ற ராமனை விஸ்வாமித்திரர் பாராட்டினார். ராமனுக்கும், லட்சுமணனுக்கும் பலம், அதிபலம் என்ற இரண்டு மந்திரங்களை கற்றுக் கொடுத்தார். மிக மிக களைப்பாக இருக்கும்போதோ, உடல் நலமற்ற வேளையிலோ, கவனக்குறைவாக இருக்கும்போதோ உயிருக்கு ஆபத்து உருவாகலாம். அந்த சமயத்தில் இந்த மந்திரத்தை பக்தியுடன் சொன்னால் எந்த அதர்மமும் அவர்களை அணுகாது. எனவே இந்த மந்திரங்களை ராம லட்சுமணர் மிகவும் கவனத்துடன் படித்தனர். படித்ததற்குரிய சக்தியும் அவர்களுக்கு கிடைத்தது. அரக்கர்களின் அழிவுக்கு பிறகு விஸ்வாமித்திரரின் யாகம் மிகச் சிறப்பாக நடந்து முடிந்தது. யாகம் முடிந்த பின், விஸ்வாமித்திரர் ராம, லட்சுமணர்களை மிதிலாபுரி நகருக்கு அழைத்தார். அந்நகரில், மிகச் சிறப்பு வாய்ந்த சிறப்பான வேள்வி நடத்தப்பட இருந்தது. அதைப் பார்த்த பிறகு ஊர் திரும்பலாம் என்பது விஸ்வாமித்திரரின் திட்டம். செல்லும் வழியில் கவுதம முனிவரின் ஆஸ்ரமத்தில் அவர்கள் தங்கினர். அங்கே சில சீடர்களைத் தவிர வேறு யாருமே இல்லை. கவுதமர் எங்கே என ராமன் விசாரித்தார். அவர் இமயமலைக்கு தவம் செய்ய சென்றுவிட்ட விபரம் தெரிந்தது. முனிவரின் மனைவி அகலிகை. அழகில் சிறந்தவள். அவளது அழகைக் கண்டு தேவேந்திரனே சபலப்பட்டான். ஒருமுறை கவுதமரைப் போலவே மாற்று உருவம் எடுத்துவந்து அவளை அடைந்தான். கோபம் அடைந்த கவுதமர் இந்திரனின் உடலழகு அழியும்படி சாபமிட்டார்.

அகலிகையை யார் கண்ணுக்கும் தெரியாமல் அதே ஆஸ்ரமத்தில் வசிக்கும்படி சொல்லிவிட்டு, களங்கமடைந்த அவள் புனிதமாவது எப்போது என்பது பற்றியும் சொல்லியிருந்தார். விஷ்ணு மானிடப் பிறப்பெடுத்து எப்போது பூமிக்கு வருகிறாரோ அவரது பாதம் படும் இடத்தில் நீ இருந்தால் மீண்டும் கற்புத்தன்மை பெறுவாய், என சொல்லியிருந்தார். இப்போது ராமபிரான் முனிவர் தங்கியிருந்த ஆஸ்ரமத்திற்கு வந்துவிட்டதால் அகலிகை சாபம் நீங்கி அனைவர் முன்னிலையிலும் தென்பட்டாள். அவள் கல்லாகக் கிடந்ததாகவும் கூறப்படுவதுண்டு. அந்தக் கல்லின்மீது ராமனின் பாதம் பட்டதும் அவள் மீண்டும் உருபெற்றாள் என்பார்கள். இந்த நேரத்தில் கவுதமரும் வந்து சேர்ந்தார். தம்பதியர் இணைந்தனர். அவர்கள் விஸ்வாமித்திரரையும், ராம லட்சுமணர்களையும் கனிவுடன் உபசரித்தனர். அகலிகை சாப விமோசனத்திற்கு பிறகு, அவர்கள் மிதிலாபுரி நகர் சென்றடைந்தனர். செல்வச்செழிப்பும், அறிவுடைய மக்களும் இணைந்த பூமி அது. காரணம் அந்நகரில் லட்சுமி நிஜமாகவே வாசம் செய்தாள். அந்நாட்டை ஜனக மகாராஜா ஆண்டு வந்தார். அவரிடம் விசித்திரமான ஒரு வில் இருந்தது. அதன் எடை மிக மிக அதிகமானது. அதை அசைக்கக்கூட யாராலும் இயலவில்லை. மன்னர் ஜனகரின் அவையில் குரு சதானந்தர் இருந்தார். அவர் கவுதம முனிவருக்கும், அகலியைக்கும் அவதரித்த திருமகன். மிதிலைக்கு வந்த ராம லட்சுமணர்களை அவர் அன்புடன் வரவேற்றார். தன் தாய்க்கு சாபவிமோசனம் அளித்த அந்த மகானை அவர் மிகவும் நேசித்தார். விஸ்வாமித்திரரிடம், முனிவரே! ஜனக மகாராஜா மிகப் பெரிய வேள்வியை நடத்த இருக்கிறார். வேள்வி முடிந்தபிறகு அவரது திருமகள் சீதைக்கு சுயம்வரம் நடத்தப்போகிறார். சுயம்வரத்திற்கு வரும் மன்னர்களுக்கு ஒரு போட்டி நடத்தப்படுகிறது. அரண்மனையில் இருக்கும் வில்லை நாணேற்றி யார் அம்பு எய்கிறார்களோ, அவருக்கே தன் மகள் சீதையை திருமணம் செய்து கொடுப்பதாக சக்கரவர்த்தி முடிவு செய்துள்ளார். ராமன் இந்த போட்டியில் நிச்சயமாக வெல்வார் என்ற நம்பிக்கை இருக்கிறது. எனவே அவரை போட்டியில் கலந்து கொள்ள செய்யுங்கள், என்றார். விஸ்வாமித்திரரும் சம்மதித்தார். இதன் பிறகு தாங்கள் தங்கியிருக்கும் இடத்திற்கு மூவரும் புறப்பட்டனர். நீலவண்ணமேனியன் ஒருவன் கருணை பொங்கும் கண்களுடனும், அழகு பொங்கும் வதனத்துடனும் வருவதைக் கவனித்தன இரு அழகு விழிகள்.
மேலும் இங்கே தொடர்க...

ராமாயணம் பகுதி-3



தசரத சக்கரவர்த்தி மகிழ்ச்சிக் கடலில் மூழ்கிப் போனார். தாயார்கள் தங்கள் செல்லக் குழந்தைகளை பார்த்து பார்த்து புளகாகிதமடைந்தார்கள். சகோதரர்கள் நால்வரும் கணமும் பிரிவதில்லை. ராமனும் சுமித்திரை மகன் லட்சுமணனும் இணை பிரிவதே கிடையாது. பரதனும் சத்ருக்கனனும் ஒன்றாகத் திரிவார்கள். இந்த சகோதர ஒற்றுமை உலக சகோதரர்கள் அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம். ஒருவருக்கு தலைவலித்தால், நான்கு பேருக்கும் வந்தது போல துடித்துப் போவார்கள். அப்படி ஒரு ஒற்றுமை.மனைவியை விட நல்ல குழந்தைகள் அமைவது ஒருவனுக்கு கிடைத்தற்கரிய ஒன்று. தசரத சக்கரவர்த்தி குழந்தைகள் விஷயத்தில் ரொம்ப கொடுத்து வைத்தவர். இன்றும் ராம லட்சுமணர்கள், பரத சத்ருக்கனர்கள் என்று தானே நாம் கூறிக் கொண்டிருக்கிறோம். ஆனால், மனிதன் இன்பத்தை மட்டுமே அனுபவிக்க பிறந்தவன் அல்லவே. அவன் துன்பக்கடலையும் கடந்தாக வேண்டுமே. ராமனின் பதினாறாவது வயதிலேயே சோதனையும் வந்தது விஸ்வாமித்திர முனிவரின் ரூபத்திலே. அவர் அன்று அரசவைக்கு வருகை தந்தார். இக்ஷ்வாகு குல மன்னர்கள் முனிவர்களின் பேச்சுக்கு மிகுந்த மதிப்பளிப்பவர்கள். அவர்களைத் தெய்வமாய் போற்றுபவர்கள். விசுவாமித்திரரைப் பற்றி அனைவரும் அறிவர். கோபக்காரர். கோபமுள்ள இடத்தில் குணமும் இருக்கும், திறமையும் இருக்கும் போலும்! தசரதர் விஸ்வாமித்திர மகரிஷியை வரவேற்றார்.

வர வேண்டும் மாமுனியே! தாங்கள் ராஜகுமாரராக அவதரித்தீர்கள். நாடாண்ட நீங்கள் இப்போது ராஜரிஷியாகி விட்டீர்கள். ராஜவம்சத்தவர், ஆன்மிகத்தில் முழுமையாக ஈடுபடுவதென்பது அசாத்தியமான ஒன்று. ஆனால், தாங்கள் அதை சாத்தியப்படுத்தி விட்டீர்கள். தாங்கள் அரண்மøனியில் தங்கிச் செல்வதன் மூலம், பெரும் பேறு அடைந்தவன் ஆவேன், என்று உபசரித்தார். இந்த உபசாரம் என்பது வெறும் புகழ்ச்சிக்காக அல்ல. உள்ளதை உள்ளபடி எடுத்துரைத்ததுடன், உண்மையான உபசாரமாக இது அமைந்தது. விருந்தினர்களை உள்ளன்போடு உபசரிக்க வேண்டும் என்பதைக் கூட ராமாயணம் நமக்கு கற்றுத் தருகிறது. வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும், மனிதன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை எடுத்துச் சொல்லும் இனிய இதிகாசமல்லவா இது! விஸ்வாமித்திரர் மகிழ்ந்தார். தசரதரை ஆசிர்வதித்தார். சக்கரவர்த்தி! நான் தங்கிச் செல்லும் நிலையில் இல்லை. உன்னிடம் ஒரு உதவி நாடி வந்திருக்கிறேன், செய்வாயா?. தசரதர் பதறியும், நெகிழ்ந்தும் போனார். தங்களுக்கு உதவி செய்யும் பாக்கியம் எனக்கு கிடைப்பதற்கே நான் கொடுத்து வைத்திருக்க வேண்டுமே! என்னிடம் அனுமதி கேட்கவே தேவையில்லை. செய் என்றால் தலை வணங்கி செய்து விட்டு போகிறேன், என்று வாக்கு கொடுத்து விட்டார் நடக்கப்போகும் விபரீதத்தை அறியாமலே. ராஜாவின் சொற்கள் விஸ்வாமித்திரரின் முகத்தில் மகிழ்ச்சி ரேகைகளை படரவிட்டன.

தசரதா! நான் உலக நன்மைக்காக கானகத்தில் ஒரு யாகம் நடத்திக் கொண்டிருக்கிறேன். அந்த யாகத்தை தாடகை என்ற அரக்கியின் புதல்வர்களான மாரீசன், சுபாகு என்பவர்கள் அழிக்க நினைக்கிறார்கள். வேள்வி குண்டத்தில் மாமிச துண்டங்களை வீசியெறிந்து வேள்வியின் நோக்கத்தையே சிதைக்க திட்டமிட்டுள்ளார்கள். என்னாலும் அவர்களை அழிக்க இயலும். ஆனால், யாகம் நடத்துவதில் நான் மிக கவனமாக இருக்க வேண்டியுள்ளது. மந்திரங்கள் சொல்வது இடையில் நின்று போகக்கூடாது. எனவே வலுவான காவலன் ஒருவன் எனக்கு வேண்டும். அவன் உன்னிடம் தான் இருக்கிறான், விஸ்வாமித்திரர் சற்றே நிறுத்தினார். யாரது! சொல்லுங்கள் மகரிஷஇ. நான் உடனே அவனை அனுப்புகிறேன். இது சத்தியம்,. தசரதர் விஸ்வாமித்திரருக்கு உதவுவதில் இன்னும் ஆர்வம் காட்டினார். ராஜா! அவன் வேறு யாருமல்ல. இந்த ராஜா பெற்ற மற்றொரு ராஜா, உன் பெரிய மகன் ராமன்,. ஆ.... தசரதர் அப்படியே ஸ்தம்பித்து நின்று விட்டார். முனிநாதா! யாரைக் கேட்டீர்கள். என் சின்னஞ்சிறு பாலகன் ராமனையா. பதினாறே வயது நிரம்பிய அந்த சிசுவையா? அவனால், எப்படி அப்பேர்ப்பட்ட அசுரர்களை எதிர்க்க முடியும்? எனக்கு இது அதிர்ச்சியாக உள்ளது,. விஸ்வாமித்திரர் கொதித்து போய் விட்டார். தசரதா! என்னிடமே வார்த்தை மாய்மாலம் செய்கிறாயா? நான் சொல்வதை செய்வதாக வாக்களித்து விட்டு உடனே தடம் புரண்டு விட்டாயே,. அவரது கனல் வார்த்தைகள் கேட்டு அனலில் விழுந்த புழுவாய் துடித்தார் தசரதர்.

முனிவரே! வார்த்தைகளால் என்னைக் கொல்லாதீர்கள். ராமனுக்கு பதிலாக நானே படைகளுடன் வருகிறேன். வேள்விக்கு எந்த பங்கமும் ஏற்படாமல் பாதுகாக்கிறேன். சிறுவனை அனுப்புவதில் உள்ள சிரமத்தைத் தான் சொன்னேன். நான் வாக்கு தவறுபவன் அல்ல,. தசரதர் கதறாத குறையாகச் சொன்னார்.விஸ்வாமித்திரருக்கு இன்னும் கோபம்.நான் உன் மகன் ராமனைத்தான் என்னோடு அனுப்பச் சொன்னேன். உன்னை வரச் சொல்வதாக இருந்தால் முதலிலேயே உன்னிடம் சொல்லியிருப்பேனே. ராமனை அனுப்புகிறாயா, இல்லையா? விசுவாமித்திரர் மிரட்டினார். தசரதர் செய்வதறியாது திகைத்து நிற்கையில், அரசகுரு வசிஷ்டர் இடையில் புகுந்து நிலைமையை சாந்தமாக்கினார். விசுவாமித்திரரைப் பற்றி அவர் அறியாத விஷயங்களா என்ன? தசரதரை அழைத்தார். தசரதா! ஏனிந்த தயக்கம். நம் கண்மணி ராமன், அரக்கர்களை அழிக்க தகுதி வாய்ந்தவனே! பதினாறு வயதிலேயே அவன் பெரும் சாதனை நிகழ்த்தப் போகிறான். அதற்குரிய சந்தர்ப்பம் அவனைத் தேடி வந்துள்ளது. இந்த சாதனையைச் செய்து, இக்ஷ்வாகு வம்சத்தின் பெருமையை மேலும் உயர்த்துவான். அவனை முனிவருடன் அனுப்பி வை,.அரசகுருவே சொன்ன பிறகு தசரதரால் என்ன செய்ய முடியும்? ஒருவாறாக மனதைத் தேற்றிக் கொண்டு, ராமபிரானை அனுப்ப சம்மதித்தார். அப்போது இளைஞன் ஒருவன் மன்னர் முன் துள்ளிக் குதித்து வந்து நின்றான். அவன் சொன்ன வார்த்தைகள் தசரதரின் தலையை இன்னும் சுழல வைத்தது.
மேலும் இங்கே தொடர்க...

ராமாயணம் பகுதி-2





குழந்தை இல்லாத கவலை தசரதரை மிகவும் வாட்டியது. அவருக்கு கவுசல்யா என்ற அன்புமிகுந்த மனைவி முதலில் அமைந்தாள். குழந்தை இல்லாததால் கேகய நாட்டுமன்னன் தன் மகள் கைகேயியை இரண்டாம் தாரமாக திருமணம் செய்துகொடுத்தார். ஆனால், அந்த பெருமாட்டிக்கும் குழந்தை பிறக்கவில்லை. அவள் அழகில் மிகவும் சிறந்தவள். ராமாயண கதாபாத்திரங்களிலேயே அழகில் சிறந்தவளாக காட்டப்படுபவள் கைகேயிதான். இதன்பின்னும் சுமித்ரா என்ற பெண்மணியை தசரதர் திருமணம் செய்தார். அவள் அறிவில் சிறந்தவள். மூன்று மனைவியர் இருந்தும் நாடாள ஒரு குழந்தைகூட பிறக்காதது அனைவர் மத்தியிலும் கவலையை எழுப்பியது. இந்நேரத்தில் ராஜகுரு வசிஷ்டர் அரண்மனைக்குள் வந்தார். வாடிப்போயிருந்த தசரதரின் முகத்தைப் பார்த்தார். தசரதரின் கவலையை குறிப்பால் உணர்ந்த அவர், தசரதா! நீ கவலை ஏதும் படவேண்டாம். ரிஷ்யசிருங்கர் என்ற முனிவர் இருக்கிறார். அவர் வேள்விகளை எவ்வித பங்கமும் இல்லாமல் சிறப்பாக செய்யக்கூடியவர். அவரைக்கொண்டு அஸ்வமேத யாகமும், புத்திரகாமேஷ்டி யாகமும் செய்தால் குழந்தையும் கிடைக்கும். அத்துடன் இந்த உலகமே உன் வசமாகும் என யோசனை சொன்னார்.

தசரதர் மகிழ்ந்தார். வேள்விகளின்போது மந்திர உச்சரிப்புகள் மிகச்சரியாக இருக்க வேண்டும். சிறிது பிசகினால்கூட விளைவுகள் எதிர்மறையாக இருக்கும். ஆனால் ரிஷ்யசிருங்கரின் நாக்கிலிருந்து வரும் ஒவ்வொரு மந்திர வார்த்தையும் எந்த பிசகும் இல்லாமல் மிகத்தெளிவாக இருக்கும். வசிஷ்டர் கூறியபடியே சிருங்கர் மிகச்சிறப்பாக இரண்டு வேள்விகளையும் செய்துமுடித்தார். அவரது ஆலோசனையின்படி, தசரதரும், அவரது மூன்று தேவியரும் மிகக்கடுமையான விரதங்களை மேற்கொண்டனர். இந்நேரத்தில் பூவுலகை ராவணன் என்ற அரக்கன் ஆண்டுகொண்டிருந்தான். அவனால் நல்லவர்கள்கூட தீய வழிக்கு சென்றுகொண்டிருந்தார்கள். நல்லதைக்கற்றுக் கொள்வதைவிட, தீயதை கற்றுக்கொள்வது மிகவும் எளிது. சாதாரண சுகங்களுக்காக தீமையான மது, மாது, சூது ஆகிய விஷயங்களில் மக்களில் ஒருசாரார் கெட்டுக்கிடந்தார்கள். விண்ணுலகிற்கு இந்த தகவல் எட்டியது. ராவணனின் புகழ் பெருகுவதைப் பார்த்தால் தங்களது பதவிக்கும் ஆபத்து வரும் என தேவர்கள் கருதினர். அவர்கள் பிரம்மனை அணுகி, விஷயத்தை எடுத்துரைத்தனர். அவர்களிடம் பிரம்மா, தேவர்களே! அந்த ராவணனை யாராலும் கொல்ல முடியாது. அதற்குரிய வரத்தை நானே அவருக்கு கொடுத்திருக்கிறேன். ஆனால், ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் அவன் தவறிவிட்டான்.

பூவுலகில் எந்தப் பொருளாலும் தனக்கு அழிவு வரக்கூடாது எனக் கேட்ட அவன், மனிதர்களால் மட்டும் அழிவு வரக்கூடாது என கேட்கவில்லை. எனவே, யாராவது ஒருமனிதனால் மட்டுமே அவனை கொல்ல இயலும். அப்படிப்பட்ட தைரியசாலிகள் யாருமே இல்லை. அவனது மூச்சுக்காற்று பட்டால்கூட சாதாரண மனிதர்கள் அழிந்து போவார்கள். எனவே நாம் மகாவிஷ்ணுவை அணுகுவோம். அவர் என்ன சொல்கிறாரோ அதன்படி நடப்போம், என்றார். பிரம்மனும் தேவர்களும் பாற்கடலில் துயில் கொண்டிருந்த பரந்தாமனை அணுகினர். அவர்களிடம் மகாவிஷ்ணு, உங்கள் வேண்டுகோளை ஏற்கிறேன். மண்ணுலகில் மானிடனாக பிறக்கிறேன். ராமன் என்ற பெயரில் விளங்குவேன். ராமாவதார காலம் முடிந்தபின்பு மீண்டும் வைகுண்டம் திரும்புவேன், என உறுதியளித்தார். தேவர்கள் மகிழ்ச்சியடைந்தனர். அதேநேரம், ரிஷ்யசிருங்கர் நடத்திய வேள்வியும் நிறைவுபெற்றது. வேள்விக்குண்டத்திலிருந்து கண்களால் உற்று நோக்கமுடியாத அளவுக்கு படுபிரகாசமான ஒளிப்பிழம்பு எழும்பியது. அதிலிருந்து ஒரு உருவம் வெளிப்பட்டது. அந்த உருவத்தின் கையில் பொன்னால் செய்யப்பட்ட ஒரு பாத்திரம் இருந்தது. பாத்திரம் நிறைய தேவலோக பாயாசம் இருந்தது.

அவ்வுருவம் தசரதன் அருகில் வந்து, மகாராஜா தசரதனே! மக்கள் மீது நீ மிகவும் அன்பு வைத்திருக்கிறாய். மக்களைக் காப்பவரை ஆண்டவன் எப்போதும் விரும்புவான். நான் கிருஷ்ணபரமாத்மாவின் தூதனாக இங்கே வந்திருக்கிறேன். இந்த தங்கப் பாத்திரத்தில் உள்ள தேவலோக பாயாசத்தை ஏற்றுக்கொள். உன் மனைவியருக்கு இதை பங்கிட்டுக்கொடு. இந்தப் பாயாசம் நோயற்ற வாழ்வைத்தரும். செல்வ வளம் செழிக்கும். முக்கியமாக, நீ கேட்கும் புத்திரபாக்கியம் கிடைக்கும். உனக்கு நான்கு குழந்தைகள் பிறப்பார்கள், என்றது. தசரதர் மிகுந்த மகிழ்ச்சியுடன் பாயாச பாத்திரத்தைப் பெற்று அரண்மனைக்குத் திரும்பினார். அந்தப் பாயாசத்தில் பாதியை முதல் மனைவி கவுசல்யாவுக்கு கொடுத்தார். மீதியிருந்ததில் பாதி பகுதியை சுமித்ராவுக்கு வழங்கினார். இதிலும் எஞ்சியதை இரண்டு பங்காக்கி அதில் ஒரு பகுதியை கைகேயிக்கு கொடுத்தார். சற்று யோசனை செய்துவிட்டு, மீதியிருந்ததை இரண்டாவது தடவையாக சுமித்ராவுக்கு கொடுத்துவிட்டார். இவ்வாறு பாயாசத்தை பிரித்துக் கொடுத்ததன் விளைவாகத்தான் பிற்காலத்தில் கைகேயியின் புத்தி தடுமாறி இருக்கவேண்டும். ஏனெனில் கைகேயிக்கு மட்டுமே குறைந்த அளவு பாயாசம் கிடைத்தது. அவளால்தான் ராமாயணம் என்ற காப்பியமே உருவாயிற்று. பாயாசத்தை அருந்திய தேவியர் மூவரும் கர்ப்பமடைந்தனர். சித்திரை மாதத்தில் புனர்பூச நட்சத்திரத்தில் ஐந்து கிரகங்கள் உச்சத்தில் இருந்த நிலையில் கவுசல்யா தேவிக்கு ஸ்ரீ ராமபிரான் அவதரித்தார். அடுத்தநாள் கைகேயி பூச நட்சத்திரத்தில் பரதனை பெற்றாள். ஆயில்ய நட்சத்திரத்தில் சுமித்ராவுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. அவர்கள் லட்சுமணன் மற்றும் சத்ருக்கனன் ஆகியோர்.
மேலும் இங்கே தொடர்க...

ராமாயணம் பகுதி-1



Blocksatz



தெய்வங்களைக் குறித்து வால்மீகி முனிவருக்கு ஏக குழப்பம். பல தெய்வங்களின் பெயர்களை சொல்கிறார்களே. இவர்களில் யார் உயர்ந்தவர்? என்பதே குழப்பத்திற்கு காரணம். திருடனாக இருந்த வால்மீகியை முனிவர் அந்தஸ்திற்கு கொண்டு வந்தவர் நாரதர் தான். அவரிடமே தன் கேள்விக்குரிய பதிலைத் தெரிந்து கொள்வோமே எனக் கருதி அவரை மனதால் துதித்தார்.நாரதர் அவர் முன்பு தோன்றினார். வியாசமுனிவரே! என்னை அழைக்க காரணம் என்னவோ?. முனிவர்பிரானே! என் மனதில் ஒரு கேள்வி பிறந்துள்ளது. கேட்கட்டுமா?.கேள்விகளில் இருந்து பதில்கள் பிறக்கின்றன. பிறப்பு தான் உலகின் ஜீவநாடி. கேளுங்கள், இப்போது இந்த உலகிலேயே நல்ல குணமுள்ளவர் யார்? யார் மிகுந்த தைரியசாலி? தர்மம் செய்வதில் யார் உயர்ந்தவர்? நன்றி மறக்காதவர் யார்? சத்தியம் தவறாத உத்தமர் யார்? மன உறுதியோடு திகழ்பவர் யார்? ஒழுக்கத்தை எக்காலமும் நழுவவிடாத உயர்ந்தவர் யார்? எதிரிகளுக்கும் நன்மை செய்பவர் யார்? எல்லா கலைகளையும் கற்றவர் யார்? அதீத சக்தி பெற்றவர் யார்? பார்த்த உடனேயே மனதிற்கு இனிமை தரும் இனியவர் யார்? உள்ளத்தில் பொறாமையே இல்லாதவர் யார்? யாருடைய கோபத்தைக் கண்டு தேவர்கள்கூட அஞ்சுகிறார்கள்? இப்படி பல கல்யாண குணங்களைக்கொண்ட உத்தமர் யாராவது இவ்வுலகத்தில் வாழ்கிறார்களா? என கேட்டார்.

அவரது கேள்வியை நன்றாக அசை போட்ட நாரதர், நீங்கள் கூறும் கல்யாண குணங்களைக்கொண்ட ஒரே மாமனிதர் ராமபிரான் மட்டுமே. அவர் அயோத்தி மன்னர். இக்ஷ்வாகு வம்சத்தில் அவதரித்தவர். புலனடக்கம் மிக்கவர். அவரைவிட அறிவில் சிறந்தவர்கள் இவ்வுலகில் வேறு யாருமில்லை. எப்பேர்ப்பட்ட எதிரியையும் அவர் அழித்துவிடுவார். பலம் பொருந்திய கைகள் அவரிடம் உண்டு. அகன்ற மார்பைக் கொண்டவர். எப்போதும் வில்லுடன் திரிவார். அவர் நடந்தால் உலகிலுள்ள அத்தனைபேரும் ரசிப்பார்கள். நடுத்தர உயரமுள்ளவர். அவரது மேனி கார்வண்ணம் உடையது. ஆனாலும், அம்மேனி ஒளிவீசும் தன்மை கொண்டது. அமைதியே வடிவாக இருப்பார். இந்த உலகத்தையே தாங்கும் சக்தி அவரிடம் உள்ளது. தர்மத்தை எக்காலத்திலும் கைவிடாதவர். புத்தி சாதுர்யம் அவரைப்போல வேறு யாருக்கும் இல்லை. துன்பக்கடல் சூழ்ந்து வந்தாலும் இமயமலையைப் போல அசையமாட்டார். அதேநேரம், கோபம் வந்துவிட்டால் அவர் அருகே யாரும் நிற்கமுடியாது.

அவரைப் பணிந்துவிட்டால் பூமாதேவியைப்போல பொறுமையின் சின்னமாகி விடுவார். செல்வத்தில் குபேரனையும் மிஞ்சுபவர். சத்தியவான். தர்மம் அவரிடம் மட்டுமே இருக்கிறது என்றார். அது மட்டுமின்றி ராமபிரானின் கதை முழுவதையும் சொன்னார். ராமனின் கதை கேட்ட வால்மீகி முனிவரின் கண்களில் நீர் கோர்த்தது. இப்பேர்ப்பட்ட மகான் ஒருவர் பூமியில் வாழ்கிறாரா? என் கைகள் அவரை எழுத வேண்டும். அந்த உத்தமனின் வரலாறு இப்பூமி உள்ளளவும் நிலைக்க வேண்டும், என உணர்ச்சி பொங்கக் கூறினார். அன்று முதல் ராமனின் நினைவைத் தவிர அவர் மனதில் வேறு எதுவுமே இல்லை. அவரை மனதில் எண்ணிக்கொண்டே தன் சீடருடன் தமசா என்ற நதிக்கரைக்கு சென்றார். நதிக்கரையில் இருந்த ஒரு மரத்தில் இரண்டு பறவைகள் விளையாடிக் கொண்டிருந்தன. அங்கு வந்த வேடன் ஒருவன் அம்பெய்தான். ஆண்பறவை அடிபட்டு இறந்தது. பெண் பறவை கதறியது. இதைக்கண்ட வால்மீகி முனிவர் வேடன்மீது கடும் கோபமடைந்தார்.

வேடனே! இந்த ஜோடிப் பறவைகளைப் பிரித்த நீ மனதில் நிம்மதி இல்லாமல் பல ஆண்டுகள் அலைவாய், என சாபமிட்டார். உலகத்தில் நடந்த ஏதோ ஒரு சம்பவத்தைப் பார்த்து, ராம நாமத்தை ஒரு நிமிடம் மறந்த அவர் கோபத்திற்கு ஆட்பட்டார். முனிவராக இருந்தும் அவசரத்தில் கோபப்பட்டுவிட்டோமே என வருந்தினார். அவர் சாபமிடும்போது பிரம்மதேவன் அங்கு வந்து சேர்ந்தார். வால்மீகியின் சாப சொற்கள் கூட இலக்கியத்தரத்துடன் அமைந்திருந்ததை கேட்டு ஆனந்தம் கொண்டார். இப்படிப்பட்ட இலக்கியவாதியால்தான் ராமனின் சரிதத்தை நன்றாக எழுதமுடியும் என கருதினார். வால்மீகியின் முன்பு பிரதட்சண்யமான அவர், முனிவரே! தாங்கள் இப்போது வேடனுக்கு சாபம் கொடுத்தபோதுகூட எதுகை மோனையுடன் நாதமும் சந்தமும் கலந்து சாபம் கொடுத்தீர்கள். இப்படிப்பட்ட திறமைவாய்ந்த நீங்கள்தான் புண்ணியமூர்த்தியான ராமனின் திரு வரலாற்றை மகாகாவியமாக வடிக்க வேண்டும்,என்றார்.

ராமபிரானின் கதையை பாடத்துவங்கினார் வியாசர். கோசலநாடு மிகப்பெரிய நாடு. செல்வச்செழிப்பு மிகுந்த நாடு. இந்நாட்டை சரயு என்ற நதி பாய்ந்து வளப்படுத்திக்கொண்டிருந்தது. இதன் தலைநகரம் அயோத்தி. அயோத்தி என்ற சொல்லுக்கு வெல்ல முடியாத நகரம் என பொருள். இந்நகரை யாராலும் கைப்பற்ற இயலாது. சூரியகுல மன்னர்கள் இந்நாட்டை சிறப்புடன் ஆண்டு வந்தனர். ஆரம்பத்தில் மனு என்பவரும், அடுத்து இக்ஷ்வாகுவும், இதையடுத்து ரகு என்பவரும் ஆண்டனர். இதன்பிறகு பொறுப்பேற்றவரே தசரத சக்கரவர்த்தி. தச ரதம் என்ற சொல்லுக்கு பத்து தேர் என பொருள். ஒரே நேரத்தில் பத்து தேர்களை இயக்கும் வல்லமை உடையவர் தசரத மகாராஜா. இதிலிருந்தே அவரது வீரத்தின் அளவை தெரிந்துகொள்ளலாம். எந்த அளவுக்கு வீரம் இருந்ததோ அதே அளவுக்கு அவர் மனதில் அன்பும் உண்டு. தன் நாட்டு மக்களிடம் கருணையைப் பொழிந்தார் தசரதர். தன்னிச்சையாக எந்த முடிவையும் எடுக்காமல் முனிவர்களிடமும், அறிவு சார்ந்த அமைச்சர்களிடமும், மகா பண்டிதர்களிடமும் ஆலோசனை கேட்டு அதன்படியே நடப்பார். அன்று, அரண்மனையில் தசரத மகாராஜா கவலையுடன் உலவிக் கொண்டிருந்தார். எதிர்காலத்தில் இந்நாட்டை காப்பாற்றப்போவது யார் என்ற கலக்கம் அவர் முகத்தில் தெரிந்தது.
மேலும் இங்கே தொடர்க...

10/13/2010

























































மேலும் இங்கே தொடர்க...

9/19/2010

இணுவில் கந்தசுவாமி கோவில்



-

இலங்கையின் வடபுலம் பண்டைத் தமிழரின் பண்பாட்டுக்கு ஓர் உறைவிடம். இங்குள்ளவர்கள் பழைமையைப் பேணுவதில் மிகுந்த ஈடுபாடுடையவர்கள். இங்கு பழம்தமிழரின் பாரம்பரிய பழக்கவழக்கங்கள் ஆழமாக வேரூன்றியுள்ளன.

யாழ்ப்பாணப் பழம்பதிகளுள் ஒன்றான இணுவில், சைவத் தமிழ்ப் பண்பாட்டுக்கு முதன்மை அளித்து வருவது யாவரும் அறிந்த உண்மையாகும். 'இணையிலி' என்று பழங்காலத்தில் அறியப்பட்ட பெயர் காலப்போக்கில் மருவி இணுவில் என வழங்கப்படுகிறது.

சைவ பாரம்பரியங்களில் இறுக்கமான பற்றுடைய இவ்வூரின் பட்டித் தொட்டியெல்லாம் இறைவழிப்பாடுகள் நடாத்தப்பட்டன. இறைவனின் திருவுருவை கோவிலென்று கும்பிடும் பழக்கம் இங்கு நீண்ட காலமாக உண்டு.

இணுவிலின் கிழக்கெல்லையிலுள்ள 'காரைக்கால் சிவன் கோவில்'வரை ஒரு வரிசையில் வைத்துப் பார்க்கும் பொழுது, எட்டுக் கோவில்கள் ஒன்றன் பின் ஒன்றாக அமைக்கப்பட்டன.

இவற்றுள் 'இணுவில் பெரிய கோவில்' என்பது இணுவில் கந்தசுவாமி கோவிலைக் குறிக்கும். இங்கு கோவில் கொண்டுள்ள முருகனை 'நொச்சியம் பதியான், காஞ்சியம் பதியான், கல்யாண வேலவர்' எனப் பல பெயர்களாற் சுட்டி அழைத்து வழிபடுபவர். இப்பெயர்கள் ஒவ்வொன்றுக்குமான பெயர்க்காரணமும் உண்டு.

இக்கோவில் காலத்தால் முற்பட்ட வரலாற்றுப் பெருமையைத் தன்னகத்தே கொண்டதுடன் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றும் ஒருங்கே அமையப்பெற்றுள்ளது. சங்குவேலி வயற்பரப்பில் இருந்து வருடா வருடம் இக்கோவிலுக்குத் தானமாக வழங்கப்படும் நெல்லில் இருந்து அரசகேசரி காலத்தில் உருவாக்கப்பட்ட தமிழ்ச்சங்கத்துடன் இக்கோவிலுக்கு நெருங்கிய தொடர்பு இருந்தது என்பது தெளிவாகிறது.

இவ்வூரின் வரலாறாக யாழ்ப்பாண வைபவமாலையில் செங்கரும்பும், செந்நெல்லும், கமுகும் தழைத்தோங்கும் இணுவிலில் மேழிக்கொடியுடையவனும் திரண்ட தோள்களையும் விரிந்த மார்பினையும் உடையவனும், குவளை மலர் மாலையை அணிந்த திருக்கோவிலூர் பேராயிரமுடையோன் முதலி ஆட்சித்தலைவனாக விளங்கினான் எனக்கூறப்படுகிறது.

இவனது ஆட்சிக்காலம் கி.பி. 1365 என முதலியார் செ.இராசநாயகம் அவர்கள் யாழ்ப்பாணச் சரித்திரத்தில் கூறியுள்ளார். அவன் மரபில் வந்த கனகராச முதலி காலத்து ஆலயமாக இவ்வாலயம் கருதப்படுவதுடன் கிட்டத்தட்ட நான்கு நூற்றாண்டு கால வரலாற்றை இக்கோவில் கொண்டுள்ளது.

மயிலங்காடு தொடக்கம் ஆனைக்கோட்டை வரை எல்லைகளாக விரிந்திருந்த 'இணையிலி' என்று அழைக்கப்பட்ட இணுவில் கிராமத்தில் முதலிக்குளம், காக்கைக்குளம் எனும் இரு குளங்கள் மூலம் வடக்கில் பருத்தி, கரும்பு, கமுகு ஆகியனவும் தெற்கில் செந்நெல்லும் தழைத்தோங்கியது.

திருவருள் சித்தத்திற்கு அமைய தன் இல்லத்தில் கந்தனுக்கு குடிலொன்றை அமைத்து முதலியார் வழிபட்டார் என்பது கர்ண பரம்பரைக் கதையாகும். அவருக்கு மக்கள் நினைவுக்கல் நாட்டி வழிபட்ட இடமே இன்று இவ்வாலயத்துக்கு முன்னால் உள்ள 'முதலியாரடி' எனப்படும் சிறு ஆலயமாகும்.

போர்த்துக்கேயரால் அழிக்கப்பட்டு பின் அதே இடத்தில் 1661ஆம் ஆண்டு அமைக்கப்பட்டதே தற்போதைய இணுவில் கந்தசுவாமி ஆலயமாகும்.

பழங்குடிமகனான வேலாயுதரும், மனைவியும் முருகனிடத்தில் ஆராத அன்புடையவர்கள். அவர் ஒரு நாள் நித்திரையாக இருந்த பொழுது முருகப்பெருமான் கனவில் தோன்றி தான் காஞ்சியம்பதியில் இருந்து வருவதாகச் சொல்லி தனக்கு இல்லிடமொன்று அமைத்துத் தருமாறு கேட்டார். அதற்கு எங்கே அமைத்துத் தருவதென்று வேலாயுதர் வினவியதும் உமது வெற்றிலைத் தோட்டத்தில் 'நொச்சித்தடி' நாட்டப்பட்டிருக்கிறது. அந்த இடத்தில் அமைக்கலாம் என்று கனவில் முருகப்பெருமான் கூறினார்.

மறுநாள் பொழுது புலர்ந்நது. என்ன அதிசயம்! வேலாயுதரின் வெற்றிலைத் தோட்டத்தில் நொச்சித்தடி ஒன்று புதிதாய் நாட்டப்பட்டிருந்தது. கனவில் காட்சி தந்து இல்லிடம் கேட்டது முருகப்பெருமான் என்றே நம்பினார். முருகப்பெருமானின் திருக்குறிப்பை நிறைவேற்ற மனம் கொண்ட வேலாயுதர் தமது தோட்டத்தில் இருந்த மாட்டுக்குடிலை நொச்சித்தடி நடப்பட்டிருந்த இடத்தில் கொண்டு வந்து வைத்தார்.

இணுவில் கந்தசுவாமி கோவில் ஆரம்பத்தில் மாட்டுக் குடிலாய் இருந்து, செங்கற் கோவிலாய் மாறி, பின் வெள்ளைக் கற்கோவிலாக தோற்றம் பெற்றது. மொட்டைக் கோபுரம் மற்றும் மூன்று தளங்களை கொண்ட இராசகோபுரம் என இரு கோபுரங்களுக்கிடையே பெரியதொரு மண்டபமும் கொண்ட கோவிலை யாழ்பாணக் கிராமப் புறங்களில் காண்பது அரிது.

இவ்வாறான அமைப்பினையுடைய இந்த ஆலயத்தின் மீது இணுவைத் தவஞானியாகிய பெரிய சந்தியாசியாரின் கண்ணோட்டம் சென்றது. சுப்பிரமணியம் என்ற பிள்ளைப் பெயர் கொண்ட இத்தவஞானி இவ்வாலயத்திற்கு அழகியதொரு திருமஞ்சம் செய்து வைக்க விரும்பினார்.

முப்பத்தைந்து அடி உயரமான இந்த திரு மஞ்சத்திற்கு நான்கு சில்லும், மேலே ஐந்து கலசங்களும் பொருத்தப் பெற்றுள்ளன. இந்த அருமையான மஞ்சத்தில் வள்ளி, தெய்வயானை சமேதரமாக ஆறுமுக சுவாமி கொலுவிருந்து மகோற்சவத்தில் பன்னிரண்டாம் திருவிழாவன்றும், தைப்பூசத் திருநாளன்றும் திருவீதியில் ஊர்ந்து வரும் காட்சி கண்கொள்ளாக் காட்சியாகும்.

ஏறத்தாழ ஒரு நூற்றாண்டு காலத்தை எட்டிப்பிடித்துள்ள இந்த மஞ்சத்தைப் போன்று ஒரு மஞ்சம் இலங்கையிலோ, இந்தியாவிலோ, வேறு எங்குமோ காணமுடியாது என தொல்பொருள் ஆராச்சியாளர் பலர் கூறியுள்ளார்கள்.

உலக பெருமஞ்சம் இது தான் என வரலாற்று அறிஞர்கள் பாராட்டியுள்ளார்கள். இந்த மஞ்சம் மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் புதுப்பிக்கப்பட்டு, நன்கு பேணுவதற்காக நாற்பதடி உயரமான மஞ்சக் கொட்டகையும் நிரந்தரமாக கட்டப்பட்டுள்ளது.

பெரியவர் காலத்தில் இணுவில் கந்தசுவாமி கோவில் தேர்த்திருவிழாவன்று நொச்சியம் பதியில் இருந்து காரைக்கால் சிவன் கோவில் வரை ஐந்து தேர்கள் சென்று திருவீதிவலம் வந்து காட்சி அற்புதமானது.

ஓர் ஆலயத்தின் கீர்த்திக்கு அவ்வாலயத்தில் அமைந்துள்ள புண்ணிய தீர்த்தமும் விசேட சிறப்பைத் தருகின்றது. அந்த வகையில் இவ்வாலயத்தின் வடக்குப் பக்கத்தில் உள்ள சாந்தியடி வயிரவர் சந்நிதியும் அதன் முன்பாகவுள்ள தீர்த்த கிணறும் மிக பிரசித்தமானவை.

நன்றி: பரிபாலனச்சபைத் தலைவர் எஸ். சோதிப்பெருமான்
மேலும் இங்கே தொடர்க...

7/18/2010

மேலும் இங்கே தொடர்க...

6/27/2010

ஸ்ரீ கற்பகப்பிள்ளையார் அடியார்களே












ஸ்ரீ கற்பகப்பிள்ளையார்அடியார்களே எம்பெருமான் விநாயகனின்
வருடாந்த திருவிழா எதிர் வரும் . 15 .7.2010 .அன்று கொடி ஏற்றத்துடன் ஆரம்பமாக வுள்ளதென்பதை மிகவும் மகிழ்ச்சி யுடன் அறியத்தருகிறோம்
மேலும் இங்கே தொடர்க...

3/14/2010

கற்பகவிநாயகர் அடியார்களே





கற்பகவிநாயகர் அடியார்களே உங்கள் விநாயக பெருமானுடைய ராயகோபுர வேலை தொடங்கப்பட்டு பாதியில் நிற்கின்றது நிதி இன்மையால் ஆகவே விநாயக அடியார்களாகிய தாங்கள் எம்பெருமான் விநாயகனின் ராயகோபுர வேலையை பூர்த்தி செய்ய உங்களால் ஆனஉதவியை செய்து உதவும் வண்ணம் எம்பெருமான் விநாயகனின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம் விநாயக அடியார்களே இதை பார்த்தவர்கள் தயவு செய்து மற்றவர்களுக்கும் கூறி எமது விநாயகனின் வங்கி இலக்கத்தை கொடுக்கும் படி கேட்டுகொள்கிறோம்...


இப்படிக்கு நிர்வாகசபை
ஸ்ரீ கற்பகப்பிள்ளையார்


நன்றி

Uduvil Katpaka Pillayar Kovil Bank
1)Account No -:Srilankan Bank Of ceylon{Boc}Chunnakam Branch - 7477556.
2}.Nistinal Seving Bank {NSB}Chunnakam Branch AccountNo-: 1-0072-01-8279-6.

மேலும் இங்கே தொடர்க...

2/17/2010

























































































































































































































































































































































மேலும் இங்கே தொடர்க...

2/14/2010

இணுவில்

ஸ்ரீ பரராச சேகரப்பிள்ளையார் கோவில்


கரும்பும் இளநீரும் காரேள்ளும் தேனும் விரும்பும் அவல்பலவும் மேன்மேல்அருந்தி குணமுடயனாய் வந்து குற்றங்கள் தீர்க்கும் கணபதியே காப்பு .

விநாயகர் புராணம்
அணுவில் மதத்தை யடக்கி என் நாளும் இணுவில் இலக்கிஜெமை யாளும்குணமணி ஓம் சீரார் பரராசசெகரப்பிள்ளையார் பேரார் பெருமைகளை பேசு ஏரார்இணுவில்வாள் எந்தை கணபதியின் தாரார் திருவடியைத் தாள் பணிவோர் - ராஅமிர்தம் போல் வாழ்வார் அருள் செல்வம் சூழ்வார் தமிழ் உள்ளவரை தளைத்து

இலங்கையில் வடபுலத்தில் கி .பி 12- 17 . ம் நூற்றாண்டு காலத்தில் ஆறியச்
சக்கரவர்த்தி களாகிய தமிழ் மன்னர்கள் அரசாண்டனர் இப் பரம்பரையில்பதினோராவது மன்னனாக அரசாண்டவர் பரராசசேகர மன்னன் இவருடன்
இவர் தம்பி செகராசசேகரனும் பின் ஆட்சி புர்ரிந்தான் என பல சான்றுகள்கூறுகின்றன





பரராசசெகரமன்னன் பல வளங்களும்மலிந்த வனப்புமிக்க நல்லுரை தலைநகராக கொண்டு அரசாண்டான் இவன்வீரமும் நிர்வாக திறமையும் மக்களிடம்அன்பும் கருணையும் ஆத்மீகசிந்தனையும் மிக்கவனாக இருந்ததால்ஆங்காங்கே பல விநாயகர்ஆலயன்களை அமைத்தான் பக்திமேலீட்டினால் வீதி யுலா வரும்போது பல சீரும் சிறப்பும் இயற்கை வனப்பும்கூடிய இணுவில் பகுதியில் இவனை கவர்ந்தது பர ராச சேகரப்பிள்ளையார்கோயிலின் கீழ் திசையில் இரு குளங்கள் காணப்பட்டன தென் திசையில் செந்நெல்லும் கரும்பும் வடபகுதியில் பருத்தியும் கூடுதலாக பயிரிடப் பட்டிருந்தன
இப் பயிர் வகைகளுடன் முக்கனி மரங்களு நறுமணம் கமழும் மலர்செடிகொடிகளும் ,கமுகு ,தென்னை ,முங்கில் ,பனை ஆகியனவும் செழித்துவளர்ந்து இருந்தன (இன்றும் குளக்கரை ,பருத்தியடைப்பு என்ற பெயர்கள் எமதுபேச்சு வழக்கில் பேசப்படுவது இதற்கு சான்றாகும்.)


திருவருள் கைகூ டவும் விநாயகபெருமானின் அமைவிடம் அரசனால் பேருவைகையுடன் தேர்ந்தெடுக்கப்பட்டது தெரிவு செய்த இடத்தில்பரராசசெகரமன்னனின் ஆணையில் அவனது பணியாளர்களினால்கட்டுவிக்கப்பட்டதெஇவ் ஆலயம் பொது மக்கள் தமது பக்தி மேலீட்டினால் இறைவழிபாடு செய்யவும் இறைபணி ஆற்றவும் துதிபாடவும் தலைபட்டனர் லயம்புசகர்களால் ஆகம விதிப்படி பூசைகள் செய்து அருள் பொலிவிக்கப்பட்டது பரராசசெகரனால் கட்டப்பட்டதால் இவ் ஆலயம் பரராச சேகரப்பிள்ளையார் கோவில்என்று அழைக்கப்பட்டது பரராசசேகரமன்னன் கோவில் அமைந்தவுடன் தனதுமந்திரி பிரதானிகளுடன் அடிக்கடி வந்து வணங்கினா னெனச் சான்றுகள்கூருகின்றன மன்னன் பிரதானிகளுடன் இங்கு வந்து வணங்கியதால் பெருமைஅடைந்தமக்கள் அதனை குறிக்ககோயிலின் உள்வீதியில் ஓவியமாகவரைந்துள்ளமை இதற்று சான்றாகும் சிங்கைப் பரராசசேகரன் கீ .பி 1475, ஆம்ஆண்டளவில் ஆட்சிக்கு வந்தவனேனவும் இக் கோவிலைக்கட்டிவித்தான்னெனவும் அறியமுடிகிறது ஏறக்குறைய 525 .ஆண்டுகள்தொன்மை வாய்ந்ததும் வரலாற்று சிறப்பு மிக்கதுமான இவ்வாலயம் பலராலும்பாரட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது .


இக்கோவிலின் அமைக்கப்பட்டதும் மூலமூர்த்தியாக அமைந்துள்ளவிநாயகபெருமானின் திருவச்சிலை தென் இந்திய சிற்ப வல்லுனர்களால்வடிவமைக்கபட்டு இங்கு எடுத்து வரப்பட்டு பிரதிஸ்டை செய்யப்பட்டதென்றுகூறுவார் சிறந்த அருள் பொலிவோடு அமைந்த திருமுகத்தைக் கொண்டஇத்திருவுருவம் இப் பத்தியில் அருள்பார்வை செலுத்துகிறது அக் காலம் தொட்டுகற்பகிரகத்தில் பிரதிஸ் ட்டை செய்த மூல மூர்த்தியை பக்கியோடுமஞ்சணமாட்டி உள்ளன்போடு மக்கள் வழிபட்டனர் மக்களின் அளவற்றபக்க்தியால் மகிழ்ந்த எம்பெருமான் அருள் மாரிபொழிகின்றார் .

இப்பெரும்தலத்தில் ஒரு பெரிய மடம் இருந்தது கோவிலுக்கு வரும் அடியார்கள்இளைப்பாறவும் தமது நேர்த்திக்கான பொங்கல் போன்ற கடமைகளைசெய்யவுமே மடம் அமைந்தது பொது மக்களின் இறைவழிபாட்டிற்கு இந்த மடம்பெரும் பங்காற்றியது 17 .ஆம் நூற்றாண்டின் மத்தியில் யாழ்பாண மண்போத்துகேயரால் கைபர்ரப்பட்டபோது இந்து சமைய கோவில்கள் யாவும் இடித்துசெதமாக்கபட்டன பரராச சேகர பிள்ளையார் கோவிலை இடிக்க வந்தஅணியினருக்கு இவ்வூர்மக்கள் இது கோவிலன்று மடம் என்று கூரியத்தால்கோயில் காப்பாற்றப்பட்டது இப்பொது மாலையில் உள் வீதி உலா வரும் சிறியவிநாயகர் உருவசிலையை மடத்தின் வாசலில் மறைத்து புதைத்து வைத்தனர்கோவிலும் முற்றாக இடிக்கப்படாது காப்பற்றப்பட்டது என முன்னோர் கூறிவந்தனர் .

போத்துகேயர் ,ஒல்லாந்த நாடுகளின் அரசாட்சியின் பின் யாழ்பானத்தைஅரசாண்ட ஆங்கிலேயரின் காலத்தில் சமைய அழிப்பு கடினமாககையாளப்பட்டதால் இவ்வூரின் சமைய வழிபாடும் நெறி முறையும் சுடர் விட்டுப்பிரகாசிக்க தொடங்கின .

பெரிய சந்நியாசியார் அவதரித்துச் சமைய மரபு பேணியதால் இணுவில்கந்தசுவாமி கோவில் காரைக்கால் சிவன் கோவில் ஆகியன அன்னியர்ஆட்சியின்

மேலும் இங்கே தொடர்க...

1/18/2010













































உடு
வில் ஸ்ரீ ற்பகபிள்ளையார் மகோச்சபம்
மேலும் இங்கே தொடர்க...
மேலும் இங்கே தொடர்க...